Thursday, 23 April 2015

அல்-ஜாமிவுல் இள்ரார்

காயல்பட்டணத்தில் கடந்த 1953-54-ம் ஆண்டுவாக்கில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் L.K. லெப்பைத் தம்பி ஹாஜி அவர்களும், M.K.T. அபூபக்கர் ஹாஜி அவர்களும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ரோஷமாக இரு பிரிவினர்களும் மோதிக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டு, இறுதியில் M.K.T. அபூபக்கர் ஹாஜி அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஒற்றுமையாக இருந்து வந்த ஊரை மிகச் சிறுபான்மையினராக இருந்து வந்த ஒரு குழுவினர் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரிக்க முற்பட்டனர். அவர்களின் இம் முயற்சிக்கு இத் தேர்தல் ஒரு ஆதரவாகவே அமைந்தது.

அதன் முதல் கட்டமாக சில ஒவ்வாத காரணங்களைக் கூறிக் கொண்டு ஒற்றுமையாக நடந்து வந்த ஜும்ஆவை பிரித்து தனி ஜும்ஆ ஆரம்பிக்க முற்பட்டனர். இது கண்டு மனம் பொறுக்கமாட்டாமல்தான் மா.மு.க. முஹிய்யத்தீன் தம்பி ஆலிம் முப்தி அவர்கள் ஒற்றுமையை காக்க முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லை. அதனால் அவர்கள் ஒரு பத்வாவை வெளியிட்டனர்.

இந்த பத்வாவின் உண்மையைக் கண்டு அதற்கு எதிர் பத்வா வெளியிட எதிர்தரப்பினர், முன்னர் மேற்படி ஆலிம் அவர்களிடம் கூறிய காரணங்களைக் கூறி வெளியிடாமல், புதிதாக ஒரு காரணத்தைக் (அதாவது கொலை பாதகம் நடைபெறவுள்ளது என்ற காரணத்தைக்) கூறி  இரண்டாவது ஜும்ஆ ஆகும் என்று காயல்பட்டணம் ஜாவியா மத்ரஸாவின் முதல்வராக இருந்த சா.ஷாஹுல் ஹமீது ஆலிம் முப்தி அவர்களைக் கொண்டு பத்வா வெளியிட்டனர்.

(இந்த சா. ஷாஹுல் ஹமீது ஆலிம் முப்தி அவர்கள் தமது இறதி காலம் வரை நமது ஷெய்குனா ஸூபி ஹஜ்ரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராகவே நடந்து வந்தார் என்பதும், 'பித்னாவாதி'யாகவே செயல்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

ஆனால் உண்மையில் எவ்வித கொலை பாதகமும் நடைபெறக் கூடிய சூழ்நிலை ஏற்படவில்லை. பல்வேறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டிருந்தன. அதுவும் காலப்போக்கில் மறைந்துவிட்டன. இரு பகுதியிலும் உள்ளவர்கள் வீடுகளில், பள்ளிகளில், தைக்காக்களில், தர்காக்களில் நடைபெற்ற விஷேசங்கள், துக்க சம்பவங்களுக்கு சென்று வரக்கூடியவர்களாகவே காணப்பட்டனர். ஒரு கொலை பாதகமாக சூழ்நிலை ஏற்பட்டிருப்பின் பயத்தால் ஒருவர் பகுதிக்கு மற்றவர்கள்(எதிர்தரப்பினர்கள்) செல்லமாட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. அச் சூழ்நிலை இல்லாததால் இவர்கள் வெளியிட்ட பத்வா காரணமில்லாமல் போய்விடுகிறது. அதனால் இரண்டாவது ஜும்ஆ என்பது  அவர்கள் கூறிய காரணத்தினாலேயே கூடாததாகிவிடுகிறது.

இந்நிலையில், புதிய ஜும்ஆவிற்கென்று பள்ளி ஒன்றைக் கட்டுவதற்கு S.O. ஹபீபு அவர்கள், S.A.ஹபீபு அவர்கள், P.S. அப்துல் காதிர் நெய்னா அவர்கள் போன்ற பெரியவர்கள் பெரும் முயற்சி எடுத்து புதிதாக 'அல்ஹாமிவுல் அஸ்ஹர்' என்ற பெயரில் பள்ளியை மெயின் ரோட்டில் கட்டி முடித்தனர்.

புதிய ஜும்ஆ பள்ளி பற்றி நம் ஷெய்குனா ஸுபி ஹஜ்ரத் அவர்கள் கூறியது:-

புதிய பள்ளி கட்டி திறக்கப்படும் போது, பல்வேறு ஊர்களிலிருந்தும் மக்கள் திரளாக வந்திருந்தனர் என்றும் அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இலங்கை தப்லீக் இயக்கத்தின் ஸ்தாபனரும் முன்னாள் அமீருமான K.A. முஹம்மது அலி ஹாஜியார் அவர்கள் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் தப்லீக் இயக்கத்தின் சேவை பற்றி விரிவாக பேசியதாகவும் அப்பள்ளியின் நிர்வாகத்தினர்களால் வெளியிடப்பட்ட நன்றி அறிக்கை (01-10-58) கூறுகிறது. அச் சமயத்தில் அப்பள்ளியைத் தோற்றுவித்த பிரமுகர்கள், கதீப் மற்றும் ஆலிம்கள் உடனிருந்தனர் என்று அவ்வறிக்கை மேலும் சுட்டிக் காட்டுகிறது என்பது அப்பள்ளி எந்நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பது விளங்க வரும்.

அப்பள்ளி திறப்புவிழா 26-9-58 வெள்ளிக்கிழமை (ஹிஜ்ரி 1378 ரபீயுல் அவ்வல் பிறை 12) அன்று  திறக்கப்பட்டது. இதற்கு ஹிஜ்ரி வருட கணக்கின்படி ஒரு வருடத்திற்கு முன்பே திறக்கப்பட இருந்தது. நமது ஷெய்குனா அவர்கள், அவ்வாண்டை அப்ஜத் முறைப்படி கணக்கிட்டுப் பார்த்து, இப்பள்ளி குர்ஆனில் கூறப்பட்ட முனாபிக்குகளின் பள்ளியான  'மஸ்ஜிது ளிரார்'  என்ற ஆயத்தோடு ஒத்துவருகிறது. எனவே இப்பள்ளி  'அல்ஜாமிவுல் ளிரார்-'
الجامع الضرار
 வழிகெட்ட பள்ளி ஆகும் என்று பயானில் பகிரங்கமாக எடுத்துரைத்தார்கள்.

(குறிப்பு:- முஸ்லிம்களிடையே பிளவையுண்டாக்கக் கருதி நயவஞ்சகர்கள் (முனாபிக்குகள்) மஸ்ஜித் ளிறார் என்ற ஒரு புதியபள்ளியைக் கட்டினார்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் தபூக் சண்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த சமயம் தாங்கள் கட்டிய பள்ளிக்கு தொழவரவேண்டுமென்று நபியவர்களளை அழைத்தார்கள். சண்டைக்கு சென்று திரும்பி வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி நபியவர்கள் சென்று விட்டார்கள். 

சண்டை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் சந்தப்பத்திலே 'முஸ்லிம்களுள் பிளவையுண்டாக்க வேண்டும், அவர்களுக்கு தீங்கிழைக்க வேண்டுமென்பதற்காகவே, அந்த மஸ்ஜித் ளிறார் என்ற பள்ளி நயவஞ்சகர்களால் கட்டப்பட்டிருக்கிறது. நன்மையைக் கருதியே அப்பள்ளியை நாங்கள் கட்டினோம் என்று அவர்கள் சத்தியம் செய்வார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள். நபியே! நீர் அங்கு செல்ல வேண்டாம். ஆரம்பத்திலே உள்ள பள்ளிதான் நீர் தொழவும், தொழ வைக்கவும் தகுதியானது' என்று நபியவர்களுக்கு அல்லாஹ் அறிவித்தான். பிறகு நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் கட்டளைப்படி மஸ்ஜிதுல் ளிறார் என்ற அந்த பள்ளி நெருப்புக்கிரையாக்கப்பட்டது.

இந்த சம்பவம் திருக்குர்ஆன் ஸூரா அத்தவ்பா, ஆயத்து 107, 108, 110 லும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சரித்திரத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது) ஷெய்குனா அவர்கள் எடுத்துக் காட்டிய அதன் அப்ஜத் கணக்கு:
ا-1          ل-30              ج-3              ا-1               م-40                     ع-70                     ا-1
ل-30         ا-1           ض—800           ر-200             ا-1                     ر-200          =1378
 
அதன்பின்னால் அப்பள்ளியின் நிர்வாகத்தினர் அப்பள்ளியின் திறப்புவிழாவை அடுத்தவருடம் தள்ளிபோட்டனர். அடுதத பயானில், 'அவர்கள் நான் சொன்னதை வைத்து திறப்புவிழாவை ஒரு வருடம் தள்ளிப் போட்டுவிட்டனர். நீங்கள் ளிரார் என்பதுடன் ஒரு வருடத்திற்குரிய கணக்கான அலிஃபை சேர்த்து 'அல்ஜாமிவுல் இழ்ரார்'-  الجامع الاضرار வழிகெடுத்துக் கொண்டிருக்கும் பள்ளி என்று வைத்துக் கொள்ளுங்கள்' என்றும் கூறினார்கள். ஷெய்குனா அவர்கள் இதை ஒரு பள்ளியாகவே ஏற்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 

ஷெய்குனா அவர்களின் கூற்றுப்படி தற்போது வரை இப்பள்ளி வஹ்ஹாபிகளின் கைகளில் சிக்கிக் கொண்டு மக்களை இன்னும் வழிகெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது அவர்களால்  முன்னறிவிப்பு செய்யப்பட்ட ஒரு கராமத்தாக உள்ளது.

No comments:

Post a Comment